
அது ஒரு சீமன்ஸ் கம்பனியாரின் தயாரிப்பு. அதற்க்கு ஒரு கொம்பு வேறு இருக்கும். ஆண்டெனா. சட்டைபாக்கெட்டுக்கு மேல் அது துருத்திக்கொண்டு நின்று இவர் பெரிய ஆள் என்று காண்பிக்கும். ஃபோன் அரைக்கிலோ என்றால் அதன் சார்ஜர் ஒரு கிலோ. இரண்டையும் தூக்கி வருவதற்கு ஒரு மஞ்சள் கலர் துணிப்பை தேவைப்படும். இதை ஆபிஸிற்கு கொண்டுவருவதே அவருக்கு நல்ல ஒரு தேகப்பயிற்சி. ஜிம்முக்கு சென்று டம்பெல்ஸ் எல்லாம் தூக்கவே வேண்டாம். நான்கு கால்களுக்கு எடுத்து காதில் வைத்து பேசினால் போதும். உடல் களைத்து வயிற்றுக்கு பசி எடுத்துவிடும். எங்களுக்கெல்லாம் பேஜர் வந்தால் ஒரே பேஜாரு. எங்காவது டெலிபோன் பூத் பார்த்து அற்பசங்கைக்கு பேண்ட்டை பிடித்துக்கொண்டு ஒதுங்கும் அவசரத்தோடு ஓடுவோம். அவர் "கை"பேசி வைத்திருந்த சமயம் உள்ளே வரும் காலுக்கு கூட காசு கேட்டு பில் போட்டு தீட்டினார்கள். அந்தகாலத்தில் அது ஒரு ஸ்டேடஸ் சிம்பல். அவருக்கு மட்டும் பேஜர் கொடுக்காமல் அந்த அலைபேசி நம்பரில் கூப்பிட்டு "ஒண்ணுமில்லை சும்மாதான்" என்று அழும்பாக பேசி அவர் பர்ஸுக்கு வேட்டு வைப்போம்.

மடியில் கனம் இருந்ததால் வழியில் பயமில்லை. இரவில் தனியாக வரும்போது அதுதான் நம்முடைய லைசென்ஸ் இல்லா துப்பாக்கி. பாதுகாப்பு கருவி. யாராவது கிட்ட வந்து பயமுறுத்தினால் தெம்பாக தூக்கி அடித்தால் எதிராளியின் கை கால்களில் பட்டால் நிச்சயம் ஃபராக்ச்சர் ஆகிவிடும். நெஞ்சில் பட்டால் ஆள் அவுட். ஃப்ரீயாக குடுத்தால் பினாயிலைக் கூட குடிக்கும் நாம் கிஃப்ட் ஆக வந்ததென்று அந்த ஃபோனை வாங்கி வைத்திருந்தது, தெம்புக்காக இரவில் ஒரு அரை டம்பளர் பால் கூடக் குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன். தானம் கொடுத்த ஃபோனை வெயிட் போட்டு பார்க்கக் கூடாதுதான். ஸாரி. ரொம்பவும் கருப்பு/வெள்ளை/பச்சை பார்த்து பார்த்து அந்த மூன்று கலர்களும் பழைய தமிழ் சாமிபடங்களில் கே.ஆர்.விஜயா பின்னால் தோன்றும் கலர்கள் போல் கண்களில் ஆடிக்கொண்டே இருந்ததால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நோக்கியா கைக்காசு போட்டு வாங்கினேன். இப்போது கூட எனக்கு அந்த மாடல் நம்பர் சொல்வது கொஞ்சம் கஷ்டம். முன்பெல்லாம் நம்பர் மட்டும் வைத்தவர்கள் இப்போது ஆல்பா நியூமரிக்கில் பெயர் சூட்டுகிறார்கள். அந்த ஃபோனில் கொஞ்சம் கலர் தெரியும், எடை கம்மி, பாக்கெட்டில் தைரியமாக வைத்துக்கொள்ளலாம், பாக்கெட் கிழியாது, தம்மாதூண்டு ஃப்ரிகுவன்சி சேர்த்து ஏதோ காது கொடுத்து கேட்கலாம் போல இருக்கும் சங்கீதம் பாட வைத்திருந்தார்கள்.
அதற்க்கப்புறம்தான் நாட்டில் எவ்வளவு ஃபோன்களடா ஒவ்வொன்றிலும் எவ்வளவு மாடல்களடா மடக்கி, நிமிர்த்தி, திறந்து, மூடி என்று பலவகைகளிலும் பேசும்படியாக. எவ்வளவோ மாடல்கள் ஃபோன் வந்தாலும் "அப்புறம்.. என்ன சாப்டாச்சா?" "பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாளா? தங்கமணி என்சாய்..." "சும்மாதான்.. போரடிக்குதுன்னு..." "பக்கத்து வீட்டு நீலு அந்த பேக்கரிக்காரனோட ஓடிப் போய்ட்டாளாமே" "மாமியாரை காசி பக்கம் ஷேத்ராடம் அனுப்பிட்டேன். பதினஞ்சு நாளைக்கு கொசுத்தொல்லை இல்லை" "ஐயோ. அவன் சரியான போர். போனை எடுத்தா வைக்க மாட்டான்டா." என்று இது போன்ற பேச்சுக்கள் மட்டும் மாறவேயில்லை.
பட உதவி: www.electroschematics.com, www.robertandrews.com
பட உதவி: www.electroschematics.com, www.robertandrews.com
2 comments:
//ஃப்ரீயாக குடுத்தால் பினாயிலைக் கூட குடிக்கும் நாம் கிஃப்ட் ஆக வந்ததென்று அந்த ஃபோனை வாங்கி வைத்திருந்தது, தெம்புக்காக இரவில் ஒரு அரை டம்பளர் பால் கூடக் குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன். //
யாரவது பாட்டரி ஆபெரடேட் பொம்மைகள் வாங்கி தந்தாலும்.. இதே கதைதான்.. ( இருநூறு ரூபாய் பொம்மைக்கு, நாம பாட்டரி செலவு ஐநூறாவது செஞ்சிருப்போம்..)
you are 100% correct Madhavaa..
anbudan RVS
Post a Comment